புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2023 10:40 AM GMT (Updated: 30 Aug 2023 10:55 AM GMT)

புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி,

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என கட்டணத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது.

அதைப்போல, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாக பிரதமர் அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


Next Story