விழுப்புரம் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது கலெக்டரிடம், பொதுமக்கள் மனு


விழுப்புரம் குடியிருப்பு பகுதியில்    செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது    கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 11:11 AM GMT)

விழுப்புரம் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு மிக அருகில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செல்போன் கோபுரம் அமைந்தால் அதன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவித நோய் பரவும் அபாயம் ஏற்படும். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதில் உரிய விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இங்கு செல்போன் கோபுரம் அமைந்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story