ஆரணி ஆற்றில் வெள்ள சேதத்தை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு


ஆரணி ஆற்றில் வெள்ள சேதத்தை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு
x

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு செய்தனர். அப்போது பிச்சாட்டூர் அணையில் இருந்து படிபடியாக தண்ணீர் திறக்க ஆந்திர அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

திருவள்ளூர்

திருப்பதி மாவட்டத்தில் பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் 1.893 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். வட கிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் ஆணை முழுவதுமாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி உபரிநீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்று கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்து சுமார் 20 கிராமங்களில் சேதம் ஏற்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியகளில் உள்ள மக்கள் பள்ளிகளிலும், சமுதாய கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பாலாறு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் அதிகாரிகள் ஜெயக்குமாரி, வெற்றிவேலன், ஜெயகுரு, பாலசுந்தரம், கண்ணன், சரவணன், புவனேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழு நேற்று பிச்சாட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது. எனவே வெள்ளம் சேதத்தை தடுக்க படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திரா பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story