40 லட்சம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல்


40 லட்சம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல்
x

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 40 லட்சம் டன்னுக்கும் மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என வழங்கல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர்

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 40 லட்சம் டன்னுக்கும் மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என வழங்கல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நெல் கொள்முதல்

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஜூன் 15-ந் தேதி நிலவரப்படி நெல் கொள்முதல் 40 லட்சம் டன்னை தாண்டி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் நெல் கொள்முதல் காலம் முடிவடையும் நிலையில் ஒட்டுமொத்தமாக 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது

கடந்த 2011-2012-ம் ஆண்டு வரை நெல் கொள்முதல் 23.87 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் 32.4 லட்சம் டன்னாக நெல் கொள்முதல் உயர்ந்தது. இதனை தொடர்ந்து 2020- 2021-ம் ஆண்டில் நெல்கொள்முதல் 44.9 லட்சம் டன் ஆகவும், 2021-2022-ம் ஆண்டில் 43.3 லட்சம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஆதார விலை

தற்போது 2022-2023-ம் ஆண்டில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

அதிகாரப்பூர்வ நிலையில் நெல் கொள்முதல் செய்யப்பட நம்பகமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் சேவைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை அத்தியாவசியத் தேவையாகும். இதன் மூலமே அதிகமான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

நடவடிக்கை

மேலும் நுகர்பொருள் வாணிபக்கழகமும், அரசும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் தங்கள் விவசாய பணியை தொடர்ந்து செய்ய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story