தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை


தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை
x

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு மற்றும் ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை

சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவரது உடைமைகளில் இருந்த கூடையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் உயிருள்ள ஏதோ ஒரு பொருள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்தகூடையை திறந்து பாா்த்தனா்.

அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் தென் அமெரிக்கா, பிரேசில் நாட்டில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் 'மர்மோசெட்' வகையை சேர்ந்த 3 சிறிய குரங்கு குட்டிகள், ஆப்பிரிக்க காடுகளில் வாழும் 45 பந்து மலைப்பாம்பு குட்டிகள், 2 நட்சத்திர ஆமைகள், வட அமெரிக்காவில் வாழும் 8 சோள பாம்புகள் இருந்தது.

இதுபற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை விலங்கு குட்டிகள் என்பதால் அதை வீட்டில் வளர்க்க எடுத்து வந்திருப்பதாக கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் அவரிடம் இருந்து 58 உயிரினங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் விமான நிலையம் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்த உயிரினங்கள் எனவும், இவை ஆப்பிரிக்கா, அமேசான் வனப்பகுதியில் வசிக்க கூடியவை எனவும் தெரிவித்தனர். பறிமுதலான வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story