பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் கை, கால் துண்டாகி பலி


பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் கை, கால் துண்டாகி பலி
x

பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய ரெயில்வே ஊழியர் கை, கால் துண்டாகி பலியானார்.

சென்னை

ரெயில்வே ஊழியர்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீரஜ்குமார் (வயது 32). இவர் தெற்கு ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர், பணி நிமித்தமாக சென்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். இவர் ரெயில் பெட்டியின் வாசலில் கதவு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மின்சார ரெயில், பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் வந்தபோது தீரஜ் குமார் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முற்பட்டார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

கை, கால் துண்டாகி பலி

இதில், நடைமேடைக்கும், மின்சார ரெயில் பெட்டிக்கு இடையில் அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் சிக்கி கொண்டது. கை மற்றும் காலை எடுக்க முயன்றபோதும் அவரால் முடியவில்லை. இதனால், அவர் வலியால் அலறித்துடித்தார். தொடர்ந்து ரெயில் நிற்காமல் சென்று கொண்டிருந்ததால் கை மற்றும் கால் முழுவதுமாக துண்டானது. இதைப்பார்த்த பயணிகள் ஓடிவந்து அவரை தூக்க முற்பட்டனர். ஆனால், அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுபற்றி அங்கிருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தீரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story