தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு...!!


தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு...!!
x
தினத்தந்தி 27 Jun 2023 3:40 PM GMT (Updated: 28 Jun 2023 8:53 AM GMT)

தாராபுரம் ராஜவாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

திருப்பூர்

கழிவுநீர் தேக்கம்

தாராபுரம் நகரின் மைய பகுதியில் ராஜவாய்கால் செல்கிறது. இங்கு தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.

இது குறித்து சுல்தானா நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் அமராவதி ராஜவாய்க்கால் தாராபுரம் மையப்பகுதியின் வழியாக சென்று கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி அருகே மீண்டும் அமராவதி ஆற்றில் இணைகிறது. தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிேயறும் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை, ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றில் உற்பத்தியாகும் கழிவுநீர் ராஜவாய்க்காலுக்கு நேரடியாக சென்று கலக்கிறது.

சுகாதார சீர்கேடு

இதனால் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நின்று கொசுக்களை உருவாக்கி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் தூங்க விடாமல் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மலேரியா, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற பல்வேறு சுகாதார சீர்கேடுகள் உண்டாக்கி வருகிறது.

இது குறித்து சுல்தானிய நகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ராஜ வாய்க்கால் தாராபுரம் நகர மைய பகுதியில் செல்கிறது. மழைக்காலங்கள் மற்றும் அமராவதி அணையில் தண்ணீர் திறக்கும் போது வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ஓடிவிடும். தற்போது வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் ஆங்காங்கே சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது.

எனவே மழைக்காலம் வரும் முன் ராஜ வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவு நீரை பொதுப்பணித்துறையினர் அகற்ற வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


Next Story