வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள்


வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள்
x

வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

பெரம்பலூர்

2022-23-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவில் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளி அளவில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் அளவில் போட்டிகள் நடைபெற்றன. அவர்களுக்கு ஓவியம், கட்டுரை, நடனம், நாடகம், இசை, களிமண்ணில் சிலை செய்தல் உள்ளிட்ட 9 விதமான கலை போட்டிகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகள் இந்த கலை திருவிழா போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.


Next Story