தூத்துக்குடி மாவட்டத்துக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள்: மேயர் பிரியா அனுப்பி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டத்துக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள்: மேயர் பிரியா அனுப்பி வைத்தார்
x

சென்னை மாநகராட்சி சார்பில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.37 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் பெறப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.37 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் பெறப்பட்டுள்ளது. அதில், ஆயிரம் குடும்பங்களுக்கான அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு, பால் பவுடர், பருப்பு வகைகள், மஞ்சள் தூள், புளி, பூண்டு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் தார்ப்பாய், குடும்பத்துக்கு 2 போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இருந்தது. இதனை 4 லாரிகள் மூலம் சென்னை மேயர் பிரியா நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் லலிதா மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் மாநகராட்சி சார்பில் கடந்த 19, 20, 21-ந்தேதிகளில் 4 லாரிகளில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story