தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்


தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x

ரேஷன் கடை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூரில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு ராமலிங்காபுரம், கோட்டையூர், பசும்பொன் நகர், பச்சையாபுரம், குலாலர் தெரு, எஸ்.பி.எம். தெரு, வடக்கு தெரு, பவுன்நகர், செக்கடி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

ரேஷன் கடை அருகே சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய் நோய் பரவ வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கோட்டையூரில் உள்ள ரேஷன்கடைக்கு தினமும் எண்ணற்ற பேர் பொருட்கள் வாங்க வருகின்றனர். அத்துடன் இந்த வழியாக எண்ணற்ற பேர் செல்கின்றனர். இந்தநிலையில் இந்த கடைக்கு அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இந்த கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயநிைலயும் ஏற்படுகிறது. ஆதலால் ரேஷன் கடை அருகில் கழிவுநீர் தேங்காத வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story