போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் இடத்தை விற்று மோசடி - 2 பேர் கைது


போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் இடத்தை விற்று மோசடி - 2 பேர் கைது
x

போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள இடத்தை வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு சம்பத் நகரை சேர்ந்தவர் உஷா (வயது 60). இவர், வேப்பம்பட்டு பகுதியில் 1,240 சதுர அடி கொண்ட நிலத்தை 2004-ம் ஆண்டு வாங்கினார். ஆனால் அந்த இடத்தில் வீடு கட்டாமல் அப்படியே விட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு சொந்தமான இடத்தில் வேறு நபர்கள் 2 பேர் வீடு கட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் ஆவடி அடுத்த கண்ணபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (53) என்பவர் உஷாவுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (57) என்பவருடன் சேர்ந்து வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த மோகனாம்பாள் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் அந்த இடத்தை இரண்டாக பிரித்து விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக உஷா, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வேறு நபர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story