போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு


போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு
x

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 87). இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் லட்சுமிபிரகாஷ் நகரில் 2,400 சதுரஅடி கொண்ட 2 இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடம் இருந்து 1983-ம் ஆண்டு வாங்கி பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வில்லங்கச் சான்று போட்டு பார்த்து வந்துள்ளார். கடைசியாக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வில்லங்க சான்று எடுத்து பார்த்தபோது, தான் வாங்கிய நிலம் சரத்பாபு மற்றும் மோகன் என்பவரது 2 பெயர்களில் பத்திரப்பதிவாகி இருப்பதும், அதில் சரத்பாபு பெயரில் இருந்த இடம் துக்சந்த் பாகுமார் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு நில மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பாலகிருஷ்ணன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சரத்பாபு மற்றும் மோகன் ஆகிய 2 பேரும் போலியான ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை கொரட்டூர் 1-வது மெயின் ரோடு, வள்ளலார் தெருவை சேர்ந்த சரத்பாபு (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து நேற்று மாலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மோகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என்று கூறப்படுகிறது.


Next Story