காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும்.

அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்ட பணிகள்

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், நம்பியூர், கோபி உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் என 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாஸ்கர்பாபு கூறும்போது, '16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) அனைத்து வட்டாரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 19-ந் தேதி மறியல் போராட்டமும், 22-ந்தேதி சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை போராட்டங்களும் நடத்தப்படும். ஊரக வளர்ச்சிதுறை போராட்டம் காரணமாக ஊராட்சி பகுதிகளில் குடிநீர், 100 நாள் திட்டப்பணிகள், அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன' என்றார்.


Next Story