சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு


சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு
x

சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம்,

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின், நேற்று முன்தினம் அய்யப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது. மண்டல பூஜையின் போது மேள, தாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் அய்யப்பா என்று சரணகோஷத்துடன் அய்யப்பனை தரிசனம் செய்தார்கள்.

மண்டல பூஜையை தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு அடைக்கப்பட்ட கோவில் நடை, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அய்யப்பனுக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடந்தன. இரவு அத்தாழ பூஜையும், பின்னர் அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 14-ந்தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 11-ந்தேதி இரவு எருமேலியில் பேட்டைத்துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் என்றும், ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


Next Story