தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.. தமிழக அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்


தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.. தமிழக அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்
x

2019ல் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் மட்டுமே ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருவதாக சட்டப்போராட்டக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2019 போராட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த நம் முதல்-அமைச்சர் நேரில் வந்து உறுதியளித்தார். இருப்பினும் இன்னமும் சொன்னதை செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்பட வருடத்தில் 365 நாட்களும் அரசு மருத்துவமனைகள் இயங்க, மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம். இருப்பினும் மருத்துவர்களின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

பொதுவாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் வேலையை விட முக்கியமான வேலை வேறு எதுவும் நாட்டில் இருக்க முடியாது. இருப்பினும் நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகிறோம்.

அதுவும் ஊதிய கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும் அரசாங்கத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை என்பதுதான் வேதனையளிக்கிறது.

மருத்துவர்களுக்கு தீபாவளி போனஸ் வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய சம்பளத்தை கூட தர மறுப்பதுதான் வருத்தமளிக்கிறது.

சுகாதாரத் துறையில் 25 வது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால் இங்கோ, துறை செயல்பாடுகளில் முதலிடத்தில் இருந்தாலும், அரசு மருத்துவர்களின் ஊதியமோ கடைசி இடம் என்று சொல்லப்படும் வகையில், தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றபோது, கொரோனாவின் உச்சத்தால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அந்த கடினமான தருணத்தில் உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களை முதல்-அமைச்சரால் என்றுமே மறக்க முடியாது.

இருப்பினும் அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றவில்லை. மேலும் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை கேட்டு, கண்ணீருடன் முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அரசு மருத்துவர்களுக்காக கலைஞர் கொடுத்த அரசாணை 354 ஐ மட்டும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

எனவே இது மக்களுக்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கான அரசும்தான் என தெரிவிக்கும் முதல்-அமைச்சர், அதை உறுதிப்படுத்தும் வகையில், அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தீபாவளி பரிசாக வழங்கிட வேண்டுகிறோம். மேலும் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிடவும் வேண்டுகிறோம்.

இவ்வாறு டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.


Next Story