லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி: கணவர் கண் எதிரே பரிதாபம்


லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி: கணவர் கண் எதிரே பரிதாபம்
x

லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண் எதிரேயே தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா (வயது 37). இவர், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று காலை ஆசிரியை தெரசா, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளி கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். மப்பேடு அருகே சென்றபோது, பின்னால் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக லாரி வந்தது.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி லாரியின் பக்கவாட்டில் விழுந்தனர். இதில் லாரியின் பின் சக்கரம் தெரசாவின் காலில் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த ஆசிரியை தெரசா, கணவர் கண் எதிேரயே பரிதாபமாக இறந்தார்.

அலெக்சாண்டர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தெரசா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story