செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்


செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
x

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தொடங்கியுள்ளது.

சென்னை,

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி அடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு (அதாவது இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜாராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில் "அனைத்து ஆதாரத்தையும் சேகரித்த பின்பே ஆதாரம் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும். கைது செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்ய முடியாது; ஏனென்றால் அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல" என்று வாதிட்டு வருகிறார்.


Next Story