சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி மனு தாக்கல்..!


சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி மனு தாக்கல்..!
x
தினத்தந்தி 14 Jun 2023 5:20 AM GMT (Updated: 14 Jun 2023 5:39 AM GMT)

சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், திமுகவினர், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி மனைவி அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட வில்லை எனவும் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். இந்த மனு பட்டியலிடப்பட்டால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story