செந்தில்பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
செந்தில்பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
Published on

சென்னை,

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. கோர்ட்டு அலுவலர்கள் மூலம் இந்த உத்தரவு நகல் செந்தில்பாலாஜிக்கு நேரில் வழங்கப்பட்டது. அவரும் உத்தரவு நகலை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும்? என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்து கேள்விகளின் தொகுப்பை தயார்நிலையில் வைத்திருந்தனர்.

கோர்ட்டு அனுமதி அளித்த 8 நாட்களில் முதல் நாளான 16-ந்தேதி அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவு நகலை அமலாக்கத்துறையினர் பெறுவதற்கும், அந்த உத்தரவு நகலை கோர்ட்டு அலுவலர்கள் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்கும், அதன்பின்பு நீதிமன்ற காவலில் இருந்து அமலாக்கத்துறை காவலுக்கு செந்தில்பாலாஜியை எடுத்துக்கொள்வதற்கும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது.

இதனால், அன்றைய தினம் செந்தில்பாலாஜியிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. அமலாக்கத்துறை விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கோர்ட்டு நிபந்தனை விதித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்று அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுதினம் (ஜூன் 21-ம் தேதி) விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் இந்த மனு நீதிபதி சூரிய காந்த் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com