'சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது' - டி.டி.வி. தினகரன்


சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது - டி.டி.வி. தினகரன்
x

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பீகார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் போதுமான நிதியை ஒதுக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 57-வது வாக்குறுதியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உரிய கால அவகாசத்தை, அடுத்து வந்த திமுக அரசு நீட்டிக்காத காரணத்தினால் அந்த ஆணையமும் செயலிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை உணர்ந்து, பீகார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் போதுமான நிதியை ஒதுக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக அரசை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story