சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்திலும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

சட்ட விதி 56-ல் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். காலையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதியை பின்பற்றி பேசினாலும் பேச அனுமதி மறுக்கிறார்;சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்சினையின் ஆழத்தை கருதி பேரவைத் தலைவர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார்.எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்.என தெரிவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com