சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்


சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நாளை தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

சுகாதார முகாம்

அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2023-24-ம் ஆண்டிற்கு தமிழக அரசால், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) முதல் 13.01.24 வரை ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 5 ஒன்றியத்திற்கு 100 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சில அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கால்நடை வல்லுநர்கள்...

மேலும், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் கிடேரி கன்று ஊர்வலம் நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story