சேலம் வழியாக செல்லும் பெங்களூரு-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்
பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் மற்றும் வேளாங்கண்ணி -பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது
சூரமங்கலம்
பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் மற்றும் வேளாங்கண்ணி -பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06547) பெங்களூருவில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி-பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) வேளாங்கண்ணியில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களுரு சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.