கூவம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி - 29-ந் தேதி தொடக்கம்


கூவம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி - 29-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2022 12:20 PM GMT (Updated: 26 Aug 2022 12:20 PM GMT)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழித்தடங்களில் மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி 29-ந் தேதி முதல் தொடங்குகிறது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கொசு ஒழிப்பு பணியில் 1,262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பேயர்கள், 220 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் எந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 66 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் மண்டலத்திற்கு 2 படகுகள் வீதம் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி வருகிற 29-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேற்கூறிய தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story