வியாசர்பாடியில் நிறைமாத கர்ப்பிணி திடீர் சாவு


வியாசர்பாடியில் நிறைமாத கர்ப்பிணி திடீர் சாவு
x

வியாசர்பாடியில் நிறைமாத கர்ப்பிணி இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் கிழக்கு 16-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுடைய மகள் இந்துமதி (வயது 25). இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சந்தோஷ் குமார் என்பவருடன் திருமணம் ஆனது. தற்போது 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதி, வளைகாப்பு முடிந்து பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் தண்ணீர் இல்லாததால் மோட்டார் சுவிட்ச்சை போட சென்ற இந்துமதி, அங்கு மயங்கி விழுந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இந்துமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து இந்துமதி மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி பலியானாரா? அல்லது கீழே இருந்த சுவிட்ச்சை போட குனிந்தபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்துமதிக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


Next Story