துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - நடுக்கடலில் அதிர்ச்சி


துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - நடுக்கடலில் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 Sep 2023 5:47 AM GMT (Updated: 19 Sep 2023 6:11 AM GMT)

இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்து மீண்டும் அத்து மீறலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 13-ம் தேதியன்று அனுமதி சீட்டை பெற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி மிரட்டினர். பின்னர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த 13 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 விசைபடகுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இதனை கண்டித்து மீனவர்கள் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீனவர்கள் மூன்று நாட்களுக்கு பின்னர் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். இதனால் பதறிப்போன மீனவர்கள் தங்களை சுட்டுவிடுவார்களோ என்று பயந்தனர். எனவே அவர்கள் உயிர் பிழைப்பதற்காக மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். இதனால் ஒவ்வொரு விசை படகிற்கும் ரூ.70 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தொடந்து இது போன்று நடைபெறும் சம்பவங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story