தமிழ் புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து


தமிழ் புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 13 April 2024 8:05 AM GMT (Updated: 13 April 2024 11:16 AM GMT)

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று 'குரோதி' புத்தாண்டு நாளை (ஏப்.14) பிறக்க உள்ளது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த "தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க அரசு முற்றிலும் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுள்ளன என்பதை மெய்ப்பிக்கும் வகையில், "உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாள் என்பதை மீண்டும் உறுதி செய்ததை எனக்குக் கிட்டிய ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன்" என ஜெயலலிதா கடந்த காலங்களில் தெரிவித்துள்ளதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மலர இருக்கும் 'குரோதி' ஆண்டு, எல்லா மக்களுக்கும் அன்பையும் நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்-செல்வ பெருந்தகை:

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் மீதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பா.ஜ.க. அரசு கடுமையான படையெடுப்பை நடத்தி வருகிறது. இதை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன. இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

நேற்று ராகுல்காந்தி நெல்லை, கோவை பொதுக்கூட்டங்களில் பேசும் போது தமிழர்களின் தொன்மையான நாகரீகம், பண்பாடு, தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவை குறித்து பெருமையாக பேசியது தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் தனித்தன்மையை பாதுகாக்க ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்தாலும், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ்சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.

சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களைதமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: "வாழ்வில் வசந்தங்களைக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.சித்திரைத் திருநாள்நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும். தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு.

தமிழர்களின் வாழ்வில்பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும்என்பது தமிழர்களின் நம்பிக்கை. அதை உண்மையாக்கும் வகையில் தமிழர்களின் வாழ்வில்அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தையும் சித்திரைத் திருநாள் வழங்கட்டும் என்று கூறி, உலகம் முழுவதும் சித்திரைத்திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்திலும், இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது. அதுவும், இந்த ஆண்டு, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை நிலைநாட்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்றன.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கொண்டாடும், நல்ல தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றது. மலரும் சித்திரையில், தளரும் பகை, வளரும் நகை என்றுமகிழ்வோடு இந்நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய குரோதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று தொடங்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கு ஏற்ப உலகிலேயே பழமையான, பண்பட்ட, பைந்தமிழ் மொழியான தமிழ்மொழியை, தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழக மக்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக இத்தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்.

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம், நாள்தோறும் அரங்கேறும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள், வேலைவாய்ப்பின்மை என எண்ணற்ற நிர்வாகச் சீர்கேடுகளால் உருக்குலைந்து, இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வெளிச்சத்தை பாய்ச்சும் ஆண்டாக இப்புத்தாண்டு அமைய நாம் அனைவரும் உறுதியேற்போம்.

மலரும் தமிழ்ப்புத்தாண்டு, தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நம்பிக்கையையும், நல்வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story