பீர்பாட்டிலால் தாக்கி கோவில் பூசாரி மண்டை உடைப்பு; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு


பீர்பாட்டிலால் தாக்கி கோவில் பூசாரி மண்டை உடைப்பு; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு
x

அரைகுறை ஆடையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றதை தட்டிக்கேட்டதால் பீர்பாட்டிலால் பூசாரி மண்டையை உடைத்த வாலிபர் கைதானார்.

திருவள்ளூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் தாலுகா நாகசீலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 23). இவர் திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில் உள்ள பாத சனீஸ்வரர் சிவன் கோவிலில் பூசாரியாக தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அகூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் அரைகுறை ஆடையணிந்து கொண்டு கோவில் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதனைக் கண்ட பூசாரி சந்தோஷ்குமார் இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த இளைஞர்கள் இருவரும் பூசாரி சந்தோஷ்குமாரை மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டை மற்றும் பீர்பாட்டிலால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அகூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 20), பேரரசு (20) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி பூசாரி சந்தோஷ்குமாரை தாக்கிய வழக்கில் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள பேரரசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே பொதட்டூர்பேட்டை, திருத்தணி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story