லட்சுமி நரசிம்மர்-சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம்


லட்சுமி நரசிம்மர்-சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்

மேச்சேரி

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவிலாகும். கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் லட்சுமி நரசிம்மர் சாமி- சோமேஸ்வர சாமி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தி தேரில் அமர்த்தப்பட்டனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோவில் முன்பு இருந்து தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், 2-வதாக சோமேஸ்வரர்- சவுந்தரவல்லி அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. பெரிய தேரில் லட்சுமி நரசிம்ம சாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது.

தேரை முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.எம்.செல்வகணபதி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தாரமங்கலம் பிரிவு சாலையில் தேர் நிறுத்தப்பட்டது.

5 நாட்கள்

இன்று (வெள்ளிக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ் நிலையம் வரையும், நாளை (சனிக்கிழமை) பஸ் நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு தெரு பிரிவு வரையும்,10-ந் தேதி தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலை சேர்கிறது.

இவ்வாறு 5 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. 11-ந் தேதி புதன்கிழமை இரவு 9 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவில் விழாவில் மாட்டு சந்தையும் கூடுகிறது.


Next Story