எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையையும் தன் வசம் வைத்திருந்தார்.

இதனிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததாகவும், இதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி, அவரது உறவினர்கள், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது ஆர்.எஸ். பாரதி புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை எனவும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது. ஆட்சி மாற்றம் காரணமாக புதிய விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com