தென்காசி சட்டமன்றத் தொகுதி தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது..!


தென்காசி சட்டமன்றத் தொகுதி தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது..!
x

தென்காசி சட்டமன்றத் தொகுதி தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தென்காசி,

தென்காசி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று பழனிநாடார் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தபால் ஓட்டுக்களை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்கு எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரியாக உதவி கலெக்டர் லாவண்யா இருந்து இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்தி வருகிறார். மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தபால் வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசார்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையம் அருகே அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை சோதனை செய்ததால் ஆத்திரம் அடைந்ததால் போலீசாரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story