'தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியை கொடுக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து


தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியை கொடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து
x

பொங்கல் திருநாளில் இயற்கையை வனங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக உழைக்க இந்த தைத்திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-

"உழவுக்கும், கால்நடைகளுக்கும் வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும்.

பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுபவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம்தான். பொங்கல் திருநாளில் இயற்கையை வனங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும். பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் இயற்கையை காக்க வேண்டியன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஒன்றாக இருக்க வேண்டும். பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது இயற்கை தான், அத்தகைய இயற்கையை காப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரைகள் தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் அங்கங்களாக மாற்றப்பட வேண்டும்.

தைப்பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும்.

தை கொடுக்காததை தரணி கொடுக்காது என்பதே உண்மை. அத்தகைய சிறப்பு மிக்க தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும். அதற்காக உழைக்க இந்த தைத்திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story