செல்போன் செயலி மூலம் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து மோசடி...


செல்போன் செயலி மூலம் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து மோசடி...
x
தினத்தந்தி 21 Jan 2024 1:47 AM GMT (Updated: 21 Jan 2024 10:09 AM GMT)

செல்போன் செயலி மூலம் வாலிபரை சிறுவர்கள் ஓரின சேர்க்கைக்கு அழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீரபாண்டி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவிக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இதையடுத்து ராஜ்குமாரின் மனைவியும், அவருடைய குழந்தையும் திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் உள்ள ராஜ்குமாரின் மாமனார் வீட்டில் தங்கியுள்ளனர். இதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக ராஜ்குமார் திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது கிரைண்டர் ஆப் மூலம் வாலிபர் ஒருவர் ராஜ்குமாரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய ராஜ்குமார் அந்த வாலிபர் கூறிய காட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள குட்டைக்கு சம்பவத்தன்று இரவு சென்றுள்ளார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடன் ராஜ்குமார் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென்று 4 பேர் கொண்ட கும்பல் ராஜகுமாரை சுற்றி வளைத்து தாக்கி உள்ளது.

இதனால் பயந்து போன ராஜ்குமார் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அந்த கும்பல் ராஜ்குமாரை தப்பிக்க விடாமல் தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 17 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்தான் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து அவரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வாலிபரிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story