குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:45 PM GMT)

வடகரை- திருப்பனையூர் இடையே உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

வடகரை- திருப்பனையூர் இடையே உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி திருப்பனையூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடகரை- திருப்பனையூர் இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியே அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு திருமருகல், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளிக்கல்லூரி மாணவ- மாணவிகள் நன்னிலம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை சென்றுவர இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி படுகின்றனர்.

நடவடிக்கை

நடந்து செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் குண்டும், குழியுமாக உள்ள வடகரை- திருப்பனையூர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story