மின்சார வயர் புதைக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்தது


மின்சார வயர் புதைக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
x

பூந்தமல்லி சாலையில் மின்சார வயர் புதைக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

சென்னை

சென்னை மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிந்ததால் மின்சார வாரியம் சார்பில் பூமிக்கு அடியில் மின்சார வயர்கள் புதைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக போரூர் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிக்காக அமைக்கப்பட்ட தூண்கள் அருகே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளத்தின் அருகே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு மின்சார கேபிள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. நல்லவேளையாக கார் டிரைவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போக்குவரத்து போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story