வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய கும்பல்


வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய கும்பல்
x
தினத்தந்தி 9 Aug 2023 5:06 AM GMT (Updated: 9 Aug 2023 5:45 AM GMT)

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காரில் வந்த கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் சுந்தர் நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 24). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது இளையராஜாவை காரில் வந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர். காரில் வந்தவர்கள் இளையராஜா சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதையடுத்து இளையராஜா அலறியபடி மர்ம நபர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

இதைகண்ட பொதுமக்கள் கூச்சலிடவே மர்ம நபர்கள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இளையராஜாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார் மர்ம நபர்கள் காரில் தப்பி செல்லும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story