நாடே ராமர் மயமாகி வருகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி


நாடே ராமர் மயமாகி வருகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி
x

கவர்னர், தாயார் சன்னதிக்கு அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

திருச்சி,

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கவர்னர், ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தாயார் சன்னதிக்கு அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

பின்னர் கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

'நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளன. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் நாடு, ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்.

கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story