விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும்


விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும்
x

விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை வருகிற 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை

போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி (road Ease) நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த செயலி மூலம் வாகன ஓட்டிகள் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அந்த செயலி வரைப்படத்தில் வாகனங்களில் செல்ல முடியாது என்பது சிவப்பு கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். மாற்று பாதையில் வாகனங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதையும் அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது சென்னையில் 129 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளும், 22 இடங்களில் மெட்ரோ ரெயில் பணியும் நடக்கிறது.

இந்த இடங்களில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் இந்த செயலி மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்படுகிறது. இந்த சாலை வரைப்பட செயலி ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.

விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகிற 28-ந்தேதி இ-சலான்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்னர் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்த அபராத நடவடிக்கை அமலுக்கு வரும்.

போதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்தை உண்டாக்கியதில் கடந்த வாரம் ஒரு தாயும், குழந்தையும் இறந்து போனார்கள். அந்த வாகனத்தை ஓட்டி சென்றவருக்கு பின்னால் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார். அந்த பெண் மீதும், வாகனத்தை ஓட்டியவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஓட்டியவர் மீது சாவுக்கு காரணமாக இருந்ததாக 304 (2) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் போலீசார் பண வசூலில் ஈடுபடும் குற்றங்கள் தற்போது பெரியளவில் நடைபெறவில்லை. சமீபத்தில் 2 பேர் மீது மட்டுமே புகார் வந்தது. அவர்கள் 2 பேரும் போக்குவரத்து போலீஸ் பிரிவில் இருந்து மாற்றப்பட்டனர். அவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்ற பண வசூலில் ஈடுபடும் போலீசார் மீது சமூக வலைத்தளங்கள் மூலம் புகார் தெரிவிக்கும் பல்வேறு நடைமுறைகள் தற்போது அமலில் உள்ளது. பொதுமக்கள் அதன் வாயிலாக புகார் கொடுத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story