பிணமாக மிதந்த முதியவர் அடையாளம் தெரிந்தது


பிணமாக மிதந்த முதியவர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 2 July 2023 4:46 PM GMT (Updated: 3 July 2023 9:22 AM GMT)

வேலூர் கோட்டை அகழியில் பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது.

வேலூர்

முதியவர் பிணம்

வேலூர் கோட்டை அகழியில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார். வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பிணத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வேலூர் வடக்கு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில் இறந்தவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெகன்நாதன் (வயது 69) என்று தெரிய வந்தது. இவர் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகளை வாலாஜாவில் வசிக்கும் அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது 30 பவுன் நகை, சீர்வரிசையாக கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அகழியில் குதித்து தற்கொலை

கடந்த சில மாதங்களாக மருமகன் சரியாக குடும்பம் நடத்தாமல் வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வரதட்சணை வாங்கி வரும்படி தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டுள்ளார்.

ஒரே மகளின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்று ஜெகன்நாதன் மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜெகன்நாதன் உடலை அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story