பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

சிவகாசியில் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

சிவகாசி, 

சிவகாசியில் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழற்குடை

சிவகாசி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பிள்ளைக்குழி முக்கு பகுதியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ஒரு நாள் கூட பஸ்கள் நின்று செல்வது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு மாறாக அதே பகுதியில் உள்ள வேறு இடத்தில் பஸ்கள் நின்று செல்கிறது. இதனால் இந்த பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மின் விளக்கு வசதி

போதிய மின் விளக்கு வசதி இல்லாத நிலையில் இந்த பயணிகள் நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்த பகுதியில் உள்ள கடைகள் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டு விடுவதால் அதன் பிறகு அந்த வழியாக செல்லும் சமூக விரோதிகள் தங்கள் தேவைக்கு இந்த நிழற்குடையை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இங்கு மது அருந்தி விட்டு அங்கேயே பாட்டில்களை போட்டு செல்கின்றனர்.

இந்த பயணிகள் நிழற்குடை உள்ள பகுதியில் தான் புதிய மாநகராட்சி கட்டிடம் மற்றும் வணிக வளாகங்கள் வர உள்ளது. அதற்கு முன்னர் இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து அங்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி பயணிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com