நவம்பட்டி காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது


நவம்பட்டி காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
x

இலுப்பூர் அருகே நவம்பட்டியில் உள்ள காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை

மேற்கூரை இடிந்து விழுந்தது

இலுப்பூர் அருகே நவம்பட்டியில் குடியிருப்பு காலனி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இருக்க கூடிய பெரும்பாலான வீடுகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் வீடுகள் பழுதான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப்படுவதாகவும், மேற்கூரை எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்திலேயே அவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தனபால் என்பவரின் வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். நவம்பட்டி குடியிருப்பு காலனியில் உள்ள பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைத்து தர வேண்டும்

இதுகுறித்து தனபால் கூறுகையில், நவம்பட்டி காலனியில் உள்ள பல வீடுகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் குடியிருக்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இதனால் உடனடியாக காலனி வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என்றார்.

இதேபோல் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story