ஏரியில் மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்


ஏரியில் மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 July 2023 6:34 PM GMT (Updated: 7 July 2023 7:22 AM GMT)

ஜோலார்பேட்டை ஏரியில் மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஊசிநாட்டான் பட்டம் பகுதியில் உள்ள ஏலகிரிமலை அடிவாரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஊசிநாட்டான் வட்டம் பகுதியில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்தப்படுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பொக்லைன் டிரைவர் மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பதும், டிப்பர் லாரி டிரைவர் மண்டலவாடியை அடுத்த சின்னகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேதுராமன் (30) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story