அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது


அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது
x

குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி அணை பயன்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக அமராவதி அணையில் இருந்து மிக குறைவான தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தடுப்பணையை தாண்டி...

இதில் கடந்த 1-ந்தேதி 1,942 கன அடியும், 2-ந் தேதி 2,100 கன அடியும், 3-ந்தேதி 1,419 கன அடியும், நேற்று 1,100 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 2-ந்தேதி கரூர் மாவட்ட எல்லை பகுதிக்கு வந்தது. இந்தநிலையில் நேற்று கரூர் வந்த தண்ணீர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி ஆர்ப்பரித்து சென்றது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story