மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு


மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
x

பள்ளிப்பட்டில் தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா கொளத்தூர் கிராமம் அருகே விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). இவர் அவ்வப்பொழுது கூலிவேலைக்கு தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது வழக்கம். இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று மதுபோதையில் ஹரி என்பவருடைய தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் கால் இடறி மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக பள்ளிப்பட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிசிச்சை பலனளிக்காமல் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேசனின் மகன் துரைவேலு என்பவர் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கும்புளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சதாசிவம் என்பவரின் மனைவி சாந்தி (வயது 55). கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த போது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி சாந்தி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story