அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்


தினத்தந்தி 17 Jan 2024 1:49 AM GMT (Updated: 17 Jan 2024 1:16 PM GMT)

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மதுரை,

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Live Updates

  • 17 Jan 2024 12:51 PM GMT

    சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு கார் பரிசு கிடைத்துள்ளது.

  • 17 Jan 2024 12:48 PM GMT

    இதில், 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்.

  • 17 Jan 2024 12:47 PM GMT

    உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

  • 17 Jan 2024 12:30 PM GMT

    16 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதல் இடத்தில் உள்ளார். 15 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்.

  • 17 Jan 2024 12:22 PM GMT

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இறுதி சுற்று விறுவிறுவென நடந்து வருகிறது.

    போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 80 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

  • 17 Jan 2024 11:33 AM GMT

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-வது சுற்று முடிவடைந்து உள்ளது. அதன் முடிவில் 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. இதில், தலா 11 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்தி ஆகிய 3 பேர் முன்னிலையில் உள்ளனர். மேல பனங்காடி முத்துராக்கு 9 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து, 9-வது சுற்று தொடங்கி நடந்து வருகிறது. போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 69 பேர் காயம் அடைந்து உள்ளனர். 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

  • 17 Jan 2024 10:42 AM GMT

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 11 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்தி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.

    போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 56 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    7-வது சுற்று முடிவில், 573 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. 8-வது சுற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கி உள்ளனர்.

  • 17 Jan 2024 10:35 AM GMT

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 2 காளைகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன.

  • 17 Jan 2024 9:56 AM GMT

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயம் அடைந்து உள்ளனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

  • 17 Jan 2024 8:51 AM GMT

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அபிசித்தர், திவாகர் தலா 11 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளனர். இதேபோன்று பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.

    போட்டியில் 43 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story