குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்


குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறை நகராட்சி அவசர கூட்டம் அதன் தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராம திலகம், துணைத்தலைவர் பிரவின் ராஜா, என்ஜினீயர் குறள்செல்வி, சுகாதார அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைவர் பொன் ஆசைத்தம்பி பேசுகையில், 'ராஜீவ் நகர் முதல் ஊத்தங்கரை சாலை வரை காங்கிரீட் தளம் அமைக்க ரூ.20 லட்சமும், வெட்டுக்காட்டு விளை முதல் படப்பறை வரை சாலையில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், திருத்துவபுரம் - உண்டனாகுழி சாலையில் தார்போட ரூ.50 லட்சமும், ஒய்.எம்.சி.ஏ. முதல் துரும்பல் வரை சாலை சீரமைக்க ரூ.18 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை

சர்தார் ஷா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு): இந்த பணிகள் பொது நிதியில் செய்யாமல் ஏதாவது திட்டத்தில் செய்ய வாய்ப்பு உள்ளதா?

தலைவர்: இந்த சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் பொது நிதியில் செய்யப்பட உள்ளது

ரவி (பா.ம.க.): மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடி 60 லட்சத்தில் கட்டப்பட உள்ளது. இதில் 50 சதவீதம் நகராட்சி பொது நிதியில் கொடுக்க வேண்டியது உள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் போட நிதி இல்லாத நிலை ஏற்படும்.

ரோஸ்லட் (காங்கிரஸ்): குடிநீர் வடிகால் வாரிய குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

ரீகன் (காங்கிரஸ்): இந்தப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்றே தெரியவில்லை.

விஜு (பா.ஜ.க.) : குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இதை கண்டு கொள்ளாத நிலை உள்ளது. இதற்காக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்.

பிரபின்ராஜா (காங்கிரஸ்): இதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையை சீரமைக்க வேண்டும்

ரெத்தினமணி (பா.ஜ.க.): கொடுங்குளம் சாலைைய காங்கிரீட் போட்டு சீரமைக்க வேண்டும்.

ஆணையாளர்: நிதி ஒதுக்கப்பட்டு தார் போடப்பட உள்ளது.

இவ்வாறு கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடந்தது.

---------


Next Story