தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!


தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!
x
தினத்தந்தி 16 Aug 2023 5:10 AM GMT (Updated: 16 Aug 2023 11:59 AM GMT)

தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கரை தட்டி நிற்கின்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் சிறிய வகையான படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழில்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி புதிய துறைமுகம் சாலையில் உள்ள கடல் பகுதியானது உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 40-அடி தூரத்திற்கு மேல் கரையில் இருந்து உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் மீனவர்கள் கடல் மேல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கரை தட்டி நின்றன. இதனால் புதிய துறைமுகம் சாலையில் சென்ற பொதுமக்கள் திடீரென கடல் உள்வாங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் கடல் உள்வாங்கியது தொடர்பாக கடல்சார் நிபுணர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் கடல்கள் சீற்றத்துடனும்,கடல் உள்வாங்கி காணப்படுவதும் இயல்பான ஒன்றுதான். எனவே இதனை கண்டு பொதுமககள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தனர். இருந்தாலும் தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதை கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.


Next Story