திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து ஊழியர்களை ஆயுதங்களால் தாக்கி ரூ.6½ லட்சம் கொள்ளை


திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து ஊழியர்களை ஆயுதங்களால் தாக்கி ரூ.6½ லட்சம் கொள்ளை
x

திருச்சுழி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

டாஸ்மாக் கடை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு அருகே அடர்ந்த காட்டு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் திருச்சுழி பள்ளிமடத்தை சேர்ந்த பூமிநாதன்(வயது49), பச்சேரியை சேர்ந்த முத்துக்கருப்பன்(45), நார்த்தம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி (48), பனையூரைச் சேர்ந்த பெருமாள்ராஜ் (40) ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மேற்பார்வையாளர்களாக புளியங்குளத்தை சேர்ந்த செந்தில், பச்சேரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோா் உள்ளனர்.

இந்த கடையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி கடந்த இரு நாட்களாக மதுபாட்டில்கள் வாங்க மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை கண்காணித்து வந்த ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை மூடும் வரை காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தது.

ஊழியர்கள் மீது தாக்குதல்

பின்னர் அவர்கள் முகமூடி அணிந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்தனர். அவர்களை பூமிநாதன் தடுக்க முயன்றார். அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் மீதம் உள்ள ஊழியர்கள் கடையை மூட முற்பட்ட போது அந்த மர்ம கும்பல் விற்பனையாளர்களான நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்களால் தாக்கியதில் அவர்களும் காயமடைந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரம், 4 செல்போன்கள், விற்பனையாளரிடம் இருந்த ½ பவுன் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த திடீர் தாக்குதலில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பலத்த காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சுழி போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story