தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பதில் மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பதில் மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஜூன் 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பின்னர் அதன் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹன்றி திபேன் ஆஜராகி, அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என வாதிட்டார்.

அப்போது அரசுத் தரப்பில், வழக்கில் எதிர்மனுதார்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story