திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரி
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் ஆடி மாத பிறப்பு முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாரதனையும் நடந்தது.

காலை 8 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி அஸ்திரதேவர் சண்முக வாசல் மண்டபம் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

மீண்டும் சண்முகவிலாச மண்டபம் வந்த சுவாமி அஸ்திரதேவருக்கு அலங்காரமாகி, தீபாராதனையாகி பின் கோவிலுக்குள் சென்றார். பின்னர் 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story